Friday, October 5, 2012

பில்லா 2

பில்லா 2 பற்றி ஏலவே நிறைய விமர்சனங்கள் வந்துவிட்டதால், நான் படத்தை பற்றி எதுவும் உள்ளே சென்று எழுதுவதாக இல்லை, படத்தை பற்றி ஒருசொல்லில் சொல்லுவதானால் நான் படம் பார்த்தவுடனே கீச்சியதை போன்று "மிஞ்சிய ஏமாற்றம்தான்". என்னடா பில்லா2 ன்னு போட்டுட்டு படத்தை பற்றியும் எழுதல, என்னத்தை பற்றி எழுத போறான் எண்டு நீங்க கேட்கிறது தெரியுது, அது வேற ஒண்டும் இல்லைங்கோ நான் யாழ் மனோகரா தியேட்டேர்ல படம் பார்க்க போன கதைதானுங்கோ.


                                                                                                        13ம் திகதி வெள்ளிக்கிழமை உலகமெங்கும் பில்லா 2 வெளியாகியது, இலங்கை,இந்திய ஒரேதின வெளியீடாக யாழ் மண்ணிலும் யாழ்நகரில் மனோகரா திரையரங்கிலும்,அச்சுவேலியில் லிபேட்டி திரையரங்கிலும் பில்லா 2 வெளியாகியது. எனக்கு தெரிஞ்ச வரையில பில்லா 2தான் யாழ்ப்பாணத்திலேயே முதன்முதலாக 2 வேறுபட்ட தியேட்டர்களில் வெளியாகின்றது நினைக்கிறேன்.(அவ்வளவு ரசிகர் பட்டாளம் போல) தற்போது வீட்டை(யாழ்ப்பாணம்) நிற்பதாலும்,தற்போதைய காலகட்ட முன்ணனி நடிகர்களுள் ஏனோ அஜித்தை பிடிக்கும் என்பதாலும், முதல் நாள் முதல் ஷோ பார்க்க முடிவாயிற்று, பதிவர் மருதமூரான் இப்பிடி பார்க்க போகின்றவர்களும் ஒரு வகையில் போர்வீரர்கள்தான் என்று உணர்ந்தநாள், அப்பேர்ப்பட்ட ஒரு போர்க்களம் :P 



முதல் நாள் இரவே நண்பனுடன் கதைத்து மோட்டார்சைக்கிளில் செல்வதாக தீர்மானித்தாயிற்று, எந்த திரையரங்குக்கு செல்வதென்று யோசித்தபோது லிபெர்ட்டி அருகில் இருந்தாலும் ஒருநாளும் சென்றதில்லை என்பதால் மனோகராவுக்கே செல்ல தீர்மானித்து காலையில் நேரத்துடன் கிளம்பியாற்று. ஒருமாதிரி தியேட்டரை படம் ஆரம்பிப்பதுக்கு 2 மணித்தியாலம் முன்னமே சென்றதால் இங்கு( யாழ் நகரில்) முன்னணி நடிகர்களின் வெளியிடன்று நடக்கும் கண்கொள்ளா காட்சியை நேரிடையாகவே பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது.ஒருமாதிரி வரிசையில் முன்னுக்கு நின்றபோதுதான் என்னடா பாண்ட் சத்தம் கேட்குது ஏதும் செத்தவீடு வருதோ எண்டு பார்த்தா திரையரங்க வாசலில் வச்சு அடிச்சுகொண்டுநிண்டாங்க்க, அந்த ரோட்டால போய் வந்த சனம்தான் அவதிக்குள்ளாயிற்று.

                                                                  பிறகு கொஞ்ச நேரத்துக்கு பிறகு பார்த்தா ஹையெஸ் வான்களில் படை பட்டாளமா ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்து இறங்கி உள்ள செத்தவீடு நடக்கிற ரேஞ்சுக்கு படம் ஆரம்பிக்கிற வரைக்கும் வெடி போட்டுகிண்டே இருந்தாங்க. பிறகு கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் பார்த்தா ரெண்டு ஓட்டோ ஸ்பீடா  வந்துச்சு, நானும் ஏதோன்னு பார்த்தா அவங்க அஜீத் கட்அவுட்க்கு பாலாபிகேசம் செய்ய பாலாம். கொணர்ந்து ஊத்தி தள்ளினாங்க அவன் பிறந்ததுக்கு இவ்வ்ளோ பால் குடிச்சானோ தெரியாது, அதுக்கு மேல எங்களுக்கும் மேல அபிஷேகம் இல்ல. அப்ப நினைச்சன் இன்னும் என்ன கருமாந்திர்ம் எல்லாம் பார்த்து படம் வேண்டியிருக்கேண்டு, இனிமேல் முதலநாள் இங்க படம் பார்க்க வரதிலைன்னு சபதம் செய்துக்கிட்டேன். பிறகு பார்த்தா தேங்காய் அடிப்பு, ஆயிரக்கணக்கா தேங்காய் சிதறிச்சு.


                பிறகு ஒருமாதிரி அடிச்சு பிடிச்சு டிக்கெட் எடுத்து உள்ள போனா, அங்க எங்கட ஆக்கள் ஹௌஸ்ஃபுல் எண்டா என்பதுக்கு இந்தியாகாரங்களுக்கு வரைவிலக்கணம் கொடுக்கிரமாதிரி இருந்தாங்க. நடைபாதை,படி எண்டு எல்லா இடமும் ஆக்கள் நகரமுடியாநிலை ஏதோ பல்கனி டிக்கெட் கிடைச்சதால ஓரளவு நிம்மதியா படம் பார்க்க முடிஞ்சுது.இதில என்ன அதிசயம் என்னண்டா வெளிநாட்டில இருந்து வந்த குடும்பம் இந்த கூட்டத்துக்குள்ள வந்து நிண்டு படம் பார்த்ததுகள்.படம் நேரத்துக்கு தொடங்குர வாடிக்கை இல்லை என்பதால் பாட்டு போய்க்கொண்டிருந்தது அதுக்கு திரைக்கு முன் மேல ஏறி ஆட பிறகு சிவாஜி பட ஆஃபிஸ் ரூம்போல ஆக்கள் வந்துதான் கலைச்சாங்க :) ,இப்பிடி படம்பார்த்து வரவேண்டியதாபோச்சு

வல்வெட்டித்துறை நகரசபையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும்.

நேற்றைய முன்தினம் மதியத்துக்கு பின்னரான பகுதிகளில் இலத்திரனியல் ஊடங்கங்களிலும், நேற்று காலை பத்திரிகைகளிலும் ஆக்கிரமித்திருந்த செய்தி இதுதான் //வல்வெட்டித்துறை நகரசபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நகரபிதா ந.அனந்தராஜ்க்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வல்வெட்டித்துறை உபதலைவர் சதீஸ் அவர்களால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரரேரணை ஒரு மேலதிக வாக்கால் நிறைவேற்றப்பட்டது//. நான் நினைக்கிறேன் 'வல்வெட்டித்துறை' என்ற நாமம் நேற்று,இன்று,நாளை என்றுமே செய்தி தீனிக்கு அவலாக இருக்கும் என்று. வல்வெட்டிதுறையிலேயே பிறந்து, வளர்ந்தவன் என்றாலும் இற்றைவரை இது சம்பந்தமாக எந்தவொரு சமூகவலைத்தளத்திலும் கருத்திட்டது கிடையாது. எனினும் இன்று நினைக்கையில் அதுவே எனது பிழை என்று எண்ண தோன்றுகிறது.எனது ஆளுமைக்கு எட்டிய வகையில்,நான் இங்கே இருந்து கண்ணூடாக பார்த்து,செவிவழி கேட்டதை கொண்டு இதன் பின்னணியில் உள்ள தார்ப்பரியங்களை கீழே வரையலாம் என்று நினைக்கிறேன்.

                                                                                                                              இந்த விடயத்தை வேட்பாளர் தெரிவு ஆரம்பித்தநாட்களில் இருந்து எனது கண்ணோட்டத்தை வெளிப்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.முதலில் தேர்தல் அறிவிக்கபட்ட உடனே ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன, பணத்துக்காக விலை போய் யானை கட்சியில் இருந்து  கூட எமது ஊரிலிருந்து வேட்பாளர்கள் போட்டியிட்டனர் , ஆனால் இறுதியில் அவர்களே அவர்களுக்கு வாக்கு போட்டார்களா என்பதே கேள்விக்குறி, அடுத்தது ஈழமக்கள் ஜனநாயக கட்சி, அதைபற்றியும் நான் இங்கு பேசப்பபோவதில்லை ஏனெனில் உண்மையாகவே தெரிவுசெய்யபட்ட இருவரை தவிர வேறு யார் போட்டியிட்டாளர்கள் என்றே எனக்கு தெரியாது.

                                        அடுத்து முக்கியமான தமிழ் தேசியகூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவுக்கு வந்தால் இவர்கள் அனைவரும் எந்தவிதத்தில் தலைமப்பீட்டத்தால் தெரிவு செய்யபட்டார்கள்? என்று கூட்டமைப்பு விளக்கவேண்டும். ஒன்று கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர்கள் இருவரின் விருப்பத்துக்கு(?) அமைய ஒருவர் தெரிவு செய்யபட்டு அவர் மூலமாக இன்னும் சிலர் தெரிவுசெய்யபட்டிருந்தனர். ஆனால் அவ்விரு பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்தது அவர்களின் எதிர்காலத்திட்டங்களை கருத்தில்கொண்டு அதாவது சிவாஜிலிங்கம் நகரசபையில் தெரிவு செய்யப்படபோவது உறுதியாக இருந்தாலும் வாக்குகளை உடைத்து அவருக்கு அவரின் ஊரிலேயே வாக்குபலம் இல்லை என்று காட்டுவதன் மூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றதேர்தல்களில் அவரை தமக்கு போட்டியாளர் இல்லாமல் ஆக்கிகொள்வது. இது அவர்களால் பிரயோகிக்கபட்ட அந்த உறுப்பினருக்கு அவ்வளவு தெரியாமல் இருக்க அவர் ஒன்றும் கல்விதகுதிகள் குறைந்தவர் அல்ல.மற்றதோர் தெரிவு வழமையான தமிழ்தேசியகூட்டமைப்பு என்பதை உணர்த்துவதுக்கு வெள்ளைதலைமுடிகாரரையும் தெரிவு செய்திருந்தது,இதுக்கு அவர் ஊரின் பிரபல பாடசாலை பழையமாணவர்சங்க பதவிகளில் கூட இருந்திருக்கிறார், இருந்தும் அவர் ஊருக்கு வரும் நாட்களை எண்ணலாம். அப்பிடியான ஒருவரை ஏன் தெரிவுசெய்கிறீர்கள்? மிகுதி போட்டியாளர்களும் முன்னணி வேட்பாளரின் அடுத்தவர் மூலம் தெரிவு செய்யபட்டனர், சுட்டிகாட்டவேண்டிய நல்ல தெரிவு யாதெனில் கூட்டமைப்பின் விதிகளுக்கு மாறாக ஒரு இளம் வேட்பாளரும் தெரிவு செய்யபட்டிருந்தார்.இவற்றின் மூலம் யான் சொல்லவருவது இனி வரும் தேர்தல்களிலாவது கூட்டமைப்பின் உயர்பீடம் சரியான தெரிவுகளை மேற்கொள்ளவேண்டும்,புது இளம் ரத்தங்களை பாய்ச்சவேண்டும். தெரிவு செய்யும் ஒவ்வொரும் இதுவரைகாலமும் சமூக,கலை,கலாச்சார என்னமாதிரியான பங்களிப்புகள் வழங்கியிருக்கின்றனர் என்று நோக்கப்படவேண்டும்.
                                                                                       அடுத்து தேர்தலும் முடிந்தது, நானும் ஒரு வாக்காளனாக எனது ஜனநாயக கடமையை செவ்வனவே நிறைவேற்றியிருந்தேன்.இருந்தும் வாக்களிப்புவீதம் குறைவாகவே இருந்தது.முடிவுகள் வந்தன, கூட்டமைப்பில் இருந்து 7 பேரும்,ஈழமக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து 2 பேரும் தெரிவு செய்யபட்டனர்.அடுத்த கேள்வி யார் நகரபிதா என்பது, தேர்தலுக்கு முன்பே கட்சி தெரிவுசெய்துவிட்டதாகவும் சுழற்சிமுறையில் இருவர் பதவிவகிப்பார்கள் என்று ஊகங்கள் வெளியிடபட்டன,இருந்தும் இறுதியில் கூடியவாக்குகள் பெற்றவர் என்ற ரீதியில் ந.அனந்தராஜ் தலைவராக தெரிவுசெய்யபட்டார். அன்றிலிருந்தே நகரபிதாக்கும்,சிவாஜிலிங்கத்துக்கும் இடையில் பனிப்போர் மூண்டது, கீரியும்,பாம்பும் ரேஞ்சுக்குதான் இருந்தது, அதுவும் ஊரில் நடந்த பொதுநிகழ்ச்சிகளில் சிலவற்றுக்கு நானும் போயிருந்தேன். அங்கே நடப்பவற்றை பார்க்கும்போது இதையெல்லாம் ஏன் படங்களில் காமெடி காட்சிகளில் சேர்க்ககூடாது என்ற அளவுக்கு இருந்தது.

                                        இப்பிடி போய்க்கொண்டிருந்தநிலையில்தான் மாட்டிறைச்சிகடையை ஏலம் விடுவதில் உறுப்பினர் ஒருவர் கையூட்டு பெற்றுகொண்டு 2ஆம் கேள்விக்காரருக்கு கொடுப்பதுக்கு சம்மதித்தது மட்டுமில்லாமல் முத்திரையில் கையொப்பம் இட்டும் கொடுத்திருந்தார், இது இணையதளங்களிலும்,குடாநாட்டு பத்திரிகையிலும் வெளியாக பிரச்சினை பூதாகரமாக வெடித்தது.இதுவே நம்பிக்கையில்லா பிரேரணையில் குறிப்பிடபட்ட முதலாவது காரணம். இந்த பிரச்சினை காலவோட்டத்தில் மறைந்துவிட்டது, இவ்வளவு ஒரு பெரிய குற்றசாட்டு ஊடகங்களில் வெளியானபோதும் கூட்டமைப்பின் உயர்பீடம் இதுக்கு என்ன நடவடிக்கை எடுத்தது? சம்பந்தபட்ட உறுப்பினர் ஏன் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தபடவில்லை? இதிலிருந்தே ஒன்று விளங்கியது கூட்டமைப்பின் உயர்பீடமும் இங்கே நடக்கும் பிச்சு,புடுங்கல்களை விரும்பியே வந்துள்ளது.

                                                                           இறுதியாக இவ் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு வந்தால் அதில் குறிப்பிடபட்டிருந்த இரண்டாவது காரணம் வல்வெட்டித்துறை பொதுஅமைப்புகளின் மீது அபாண்ட குற்றசாட்டுக்கள் சுமத்தியமை,அரசாங்க பாடசாலை அதிபர்,ஆசிரியர் ,தனிநபர்களை அவமதித்தமை.இதுபற்றி முறைப்பாடுகள் கிடைக்கபெற்றதாகவும் அறிந்துகொண்டேன்.இதில் ஓரளவு யதார்த்தமும்தான் இருக்கிறது, அண்மையில் நகரசபைக்குட்பட்ட புகழ்பெற்ற முருகன் ஆலயதிருவிழா ஒன்றின் போது காவடிக்கு இடையூறு எற்ற்படுத்தியிருந்தார் என்று செவி வாயிலா அறிந்திருந்தேன்.அடுத்து நகரபிதா வல்வெட்டித்துறை நகரபிதாதான், அமெரிக்க ஜனாதிபதியல்ல அதை கருத்தில் கொள்ளவேண்டும், தேவையில்லாமல் எல்லா விடயங்களிலும் தமது சுயலாபத்தை கருத்தில் கொண்டு மூக்கை நுழைத்து, திருவிழா கூட்டத்தில்  தொலைந்து போன பிள்ளை போல நடுவில் நின்று மூக்குடைபடுவதை தவிர்க்கவேண்டும்.அடுத்தது சிவாஜிலிங்கம் எடுத்ததுக்கெல்லாம் எதிர்ப்பு அரசியலை பாவிக்ககூடாது. ஒரு சில நல்ல வேலைத்திட்டங்கள்தான் நிறைவேறும், அவற்றை ஆதரிக்கவேண்டும்.

                                                                                              அடுத்தது இவ்வளவு எல்லாம் நடைபெறும்போது இது பற்றி செய்தி வெளியிடும் இணையத்தளங்கள் பற்றி சொல்லியாகவேண்டும்.இன்று பேஸ்புக்கில் ஒரு கமெண்ட் பார்த்தேன் //வல்வெட்டித்துறை நகர சபையில் மீண்டும் குழப்பம் - கனடிய ஊடகங்களின் நேற்றைய முக்கிய செய்தி// எனக்கு பார்த்தஉடனே சிரிப்புதான் வந்தது. இவ் இணையயதளங்களின் நோக்கம் வாசகர்களை கவருவதான், அதற்காக யதார்த்தம் என்ன என்பதை வெளிபடுத்தாமல் தமது ஊகங்களின் மூலம் திரிபுபடுத்தபட்ட கண்ணோட்டத்தை புலம்பெயர்நாடுகளில் உள்ளவர்களுக்கு வழங்குவதன் மூலம் இங்கே முற்றிலும் ஒரு குழப்பமான நிலையே இருக்கின்றது என்ற மாயை ஏற்படுத்துவதன் மூலம், இங்கு வரவிருக்கும் உதவிதிட்டங்களைதடுக்க முனைகிறார்களா? அடுத்து மேற்படி இணையத்தளங்களின் உரிமையாளர்கள் யார் என்பதும் சந்தேகமாகவே உள்ளது. அடுத்து ஊர் பெயரில் இயங்கும் இணையத்தளங்கள் முக்கிய இருவரின் ஒவ்வொருவருக்கும் பக்கசார்பாகவே இயங்குகின்றது போலத்தோன்றுகிறது இவற்றின் செய்தி தயாரிப்பு முறைகளை பார்க்கும்போது எண்ணவைக்கிறது.

                                                                          அடுத்து இவ்வளவு நடந்தும் தமது கட்சி ஆட்சியில் உள்ள நகரசபை ஒன்றில், நகரபிதாவுக்கு எதிராக தமது கட்சிஉறுபினர்களே நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரும்போது கட்சியின் தலைமைப்பீடம் எங்கு பாத்துகொண்டிருத்தார்கள்? அல்லது தலைமைப்பீடத்துக்கு  இது பற்றி முன்கூட்டியே தெரியுமா? நேற்று முன்தினம் இணையத்தளம்,நேற்று பத்திரிகையில் செய்தி வெளியாகிருந்தபோதும், கூட்டமைப்பின் சார்பில் பேசவல்ல ஒருவரும் ஏன் இத்தருணம் வரை ஒரு விளக்கமும் வழங்கவில்லை? குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க கூட்டமைப்பு முயல்கிறதா? இப்பிடி ஒரு குழப்பமான நிலையிலே வைத்திருப்பதன்மூலம் இப்பிரதேசத்தில் இருந்து உறுதியான அரசியல் பேரம் பேசும் சக்தி வருவதை தடுக்க முனைகிறதா? தங்களின் இடங்களுக்கு போட்டியாக வரும் என்று அஞ்சுகிறார்களா? எவ்வளவு நாளைக்குத்தான் தேசியத்தின் மூலம் முன்னொருகாலத்தில் கிடைத்த ஆணையை வைத்து அரசியல் நடத்தபோகிறீர்கள்? மாற்றுதெரிவு இல்லை என்பது விரைவில் பொய்யாக்கபோகிறீர்களா?